CPI மாநிலச் செயலாளர் பொறுப்பில் தொடர்வாரா முத்தரசன்? - பரவும் தகவலின் பின்னணி என்ன?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பதவி வகிக்கும் இரா.முத்தரசன் அப்பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பாரா அல்லது புதிய மாநிலச் செயலாளர் அறிவிக்கப்படுவாரா என்பது குறித்து விவாதங்கள் கட்சி மட்டத்தில் நடந்து வரும் சூழலில் அதுகுறித்து விரிவாக விசாரித்தோம்!
மாற்றப்படும் மாநிலத் தலைமைகள்!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில், அரசியல் கட்சிகளில் `மாநிலத் தலைமை மாற்றம்` அரங்கேறி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வயது மூப்பு, மாநிலத் தலைமைக்கான காலம் நிறைவடைதல் உள்ளிட்ட காரணங்களால் சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு பெ.சண்முகம் தேர்வானார். அதேபோல, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கும் பொருட்டு அண்ணாமலையை பா.ஜ.க மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை தேர்வு செய்தது பா.ஜ.க.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இரா.முத்தரசனும் மாற்றப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் மக்கள் நலக் கூட்டணி அமைத்து மாற்றுச் சக்தியாக முன்னிறுத்தி முக்கியமான காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு வந்தார் இரா.முத்தரசன். 2015-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2019, 2022 ஆகிய மாநில மாநாட்டுகளின் மீண்டும் தேர்வாகி மாநிலச் செயலாளராக 9 ஆண்டுகளை நெருங்கியிருக்கிறார்.

9 ஆண்டு பதவிகாலம் நிறைவு!
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் ``சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் ஏற்கனவே மூன்றுமுறை தேர்வாகி 9 ஆண்டு காலமாக பொறுப்பில் தொடர்கிறார். கட்சி விதிகளின் 75 வயதை கடந்தவர்களையும், மூன்று முறை பொறுப்பு வகித்தவர்களை மாற்ற வேண்டும் என்பது விதி. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் 18-ம் தேதி வரை அக்கட்சியின் மாநில மாநாட்டு நடைபெற இருப்பதால் இன்னும் மாநிலச் செயலாளர் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது, மூன்றுமுறைக்கு மேல் மாநிலச் செயலாளராக தொடரும் சான்றுகள் மிகக் குறைவு” என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ``தி.மு.க அரசை கடுமையாக விமர்சிக்க மறுக்கிறார் என்பதைதாண்டி மாநிலச் செயலாளரான முத்தரசன்மீது கட்சியினருக்க்கு பெரிய அதிருப்திகள் இல்லை. ஆக்ட்டிவாக இருப்பதால் தேசிய தலைமையும் அவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது. விதிகள் இருந்தாலும் சட்டமன்றத் தேர்தல், மாநிலக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அவர் பொறுப்பில் தொடரும் வாய்ப்புகளும் உள்ளன. ஒருவேளை மாநிலக் குழு முடிவெடுத்து, மூன்றில் இரு பங்கு மாநில குழு நிர்வாகிகள் அவரையே மீண்டும் மாநிலச் செயலாளராக முன்மொழிந்தால் அவர் தொடரலாம். தோழர் நல்லகண்ணுவுக்கு அப்படியொரு விதிவிலக்கு கொடுக்கப்பட்டது” என்றனர்.

முத்தரசன் கையில்...
மாநிலச் செயலாளராக தொடர்வதும், வேறு ஒருவரை முன்மொழிவதும் முத்தரசன் கையில்தான் இருப்பதாக சொல்கிறார்கள் தோழர்கள். 9 ஆண்டுகள் பொறுப்புவகித்து 75 வயதை தொட்டிருக்கும் முத்தரசன், அடுத்த மூன்று ஆண்டுகள் தொடர விருப்பம் தெரிவிக்கப் போகிறாரா.. அல்லது வேறு ஒருவரை முன்மொழியப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆகஸ்ட மாதம் மாநில மாநாடும், செப்டம்பரில் தேசிய மாநாடு நடைபெறுவதால் பரபரப்பாக காணப்படுகிறது பாலன் இல்லம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY