பறக்கும் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: தெற்கு...
ஆக்ரோஷத்தில் உக்ரைன்: கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் பயங்கர தாக்குதல்
ரஷியா - உக்ரைன் போர் தீவிரமடைந்து, ஆக்ரோஷ தாக்குதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளது.
இதுவரை எதிர் தாக்குதலை உக்தியாகக் கையாண்டு வந்த உக்ரைன், தற்போது ஆக்ரோஷ தாக்குதலைக் கையிலெடுத்துள்ளது. அதன் ஒரு நடவடிக்கையாகவே, கெர்ச் பாலத்தின் தூண்களை, நீருக்கு அடியிலிருந்து வெடிக்கும் வெடிகுண்டுகளைக் கொண்டு வெடிக்க வைத்துத் தகர்த்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிமியாவையும் ரஷியாவையும் இணைக்கும் பாலமாக இருக்கும் கெர்ச் பாலத்தை, உக்ரைன் குறி வைத்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.
மிகவும் சக்திவாய்ந்த் 1,100 கிலோ கிராம் எடைகொண்டு வெடிகுண்டை, நீருக்கு அடியிலிருந்து வெடிக்க வைத்து, ஜூன் 3ஆம் தேதி கெர்ச் பாலத்தின் தூண் தகவர்க்கப்பட்டிருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சாலை மற்றும் ரயில் தண்டவாளங்களைத் தாங்கி நிற்கும் மேம்பாலத்தின் தூண்கள் இதில் சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, மேம்பாலத்தில் நேற்று நாள் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் போக்குவரத்துத் தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
போர் ஏன்?
கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன், நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதன் மீது ரஷியா படையெடுத்து கிழக்கு உக்ரைனின் 4 பிரதேசங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் போரிட்டுவருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான வீரா்களும் மக்களும் உயிரிழந்துள்ளனர்.
ஒரு பக்கம் போர் நிடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு தரப்பினரும் பலகட்டங்களாக பேச்சுவாா்த்தையும் நடத்திவருகின்றனா்.
இதையும் படிக்க.. பிரியாணியும் பொரிச்ச கோழியும்.. சிறுவன் ஆசை நிறைவேறியது! கேரள அங்கன்வாடி மெனு மாற்றம்!!
இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லையென்றாலும், இதுவரை இல்லாத மிகப் பெரிய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது.
இருந்தாலும், ரஷியாவும் உக்ரைனும் ஒன்றையொன்று தொடா்ந்து தாக்கிவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துவருகிறது. தற்போது உக்ரைன் தரப்பிலும் ஆக்ரோஷமான தாக்குதல் நடந்து வருகிறது.