விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம்: ஆர்சிபி கேப்டன்
விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
இதையும் படிக்க: ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?
18 ஆண்டுகளாக கோப்பைக்கானத் தேடலில் உள்ள இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால், இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக, கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி அணி இறுதிபோட்டியில் விளையாடியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி முதலும், கடைசியுமாக கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடியது. தற்போது அந்த அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
விராட் கோலிக்காக... ஆர்சிபி கேப்டன் கூறுவதென்ன?
9 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி முன்னேறியுள்ள நிலையில், ஆர்சிபிக்காக பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் விளையாடி வரும் விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம். பல ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி வருகிறார். இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம். எப்போதும் விஷயங்களை எளிமையாக கையாள்வது எனக்குப் பிடிக்கும். எங்கு விளையாடினாலும் அது எங்களது சொந்த திடலில் விளையாடுவது போன்ற உணர்வைத் தருகிறது. பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆர்சிபிக்காக தங்களது சிறப்பான ஆதரவை அளித்து வருகிறார்கள் என்றார்.
இதையும் படிக்க: ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, எந்த அணி முதல் முறையாக கோப்பையை வெல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.