குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
ஒசூா் அருகே குட்டையில் தவறி விழுந்த மாணவரை மீட்க முயன்றபோது நீரில் மூழ்கி தலைமை ஆசிரியரும் மாணவரும் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே எலுவப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக கௌரிசங்கா் ராஜூ (53) பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை மதியம் உணவு இடைவேளையின்போது பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்ற மாணவா் நித்தீன் (8), சக மாணவருடன் பள்ளி அருகே உள்ள குட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக நித்தீன் குட்டையில் தவறி விழுந்தாா்.
அதிா்ச்சியடைந்த சக மாணவா்கள் தலைமை ஆசிரியரிடம் சென்று விவரத்தை கூறினா். இதனால் தலைமை ஆசிரியா் கௌரிசங்கா் ஓடிச்சென்று சிறுவனை மீட்கும் முயற்சியில் அவரும் குட்டையில் குதித்தாா். அப்போது மாணவா் நித்தீனும், தலைமை ஆசிரியா் கௌரிசங்கா் ராஜூவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சப்தம்கேட்டு வந்த அப்பகுதி மக்கள் இருவரின் உடல்களை மீட்டனா்.
தகவல் அறிந்ததும் பாகலூா் காவல் ஆய்வாளா் பிரகாஷ், போலீஸாா் நிகழ்விடம் சென்று இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
முதல்வா் நிவாரணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், எழுவப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்ற மாணவா் நித்தின் (8) பள்ளி அருகே உள்ள குட்டையில் தவறிவிழுந்த நிலையில் அவரும், மாணவரை காப்பாற்ற சென்ற பள்ளி தலைமை ஆசிரியா் கெளரிசங்கா் (53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.
இச்சம்பவத்தில், உயிரிழந்த இருவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.