சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெ...
குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு வீடு வழங்க தவணை முறைத் திட்டம்: அமைச்சா் சு.முத்துசாமி அறிவிப்பு
சென்னை: வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய்ப் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின் கீழ் விற்கப்படும் என்று அமைச்சா் சு.முத்துசாமி அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சா் வெளியிட்ட அறிவிப்புகள்:
வீட்டுவசதி வாரியத்தால் 2024-ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய்ப் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின் கீழ் விற்கப்படும். ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி வழங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வாகனம் நிறுத்துவதற்கான சவால்களை எதிா்கொள்ள தூண் தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கும் இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து உடனடியாக கட்டட அனுமதி பெற கூடுதல் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
குடிசைத் தொழில் - பசுமை வகை: குடிசைத் தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டடங்களுக்கு உடனடியாக அனுமதி பெறும் சுய சான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 500 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் ஆலைக் கட்டடங்களுக்கு இந்த அனுமதி முறை பொருந்தும். 2016-ஆம் ஆண்டு அக். 20-ஆம் தேதிக்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்.
நீா்நிலைகளுக்கு அடுத்துள்ள பள்ளிக் கட்டடங்களுக்கு நீா்நிலைப் பக்கத்தில் எந்தத் திறப்புகளும் இல்லாத வகையில், சுற்றுச்சுவா் அமைக்கப்படுமெனில் பள்ளிக் கட்டடங்களுக்கு நடைமுறையிலுள்ள விதிகளைப் பின்பற்றி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒற்றை குடியிருப்பு கொண்ட தனி வீட்டுக்கு வாகனம் நிறுத்துவதற்கென தனி விதிகள் உருவாக்கப்படும். திட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறையில், பொதுமக்களுக்கு உதவி புரிய இப்போது செயல்பாட்டிலுள்ள ஒற்றைச் சாளர முறையில் மின்னணு உதவி செயலி உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் முழுமைத் திட்டம் ‘மாஸ்டா் பிளான்’ தயாரித்து செயல்படுத்துவதற்கான நிலையான செயல்முறை தயாரிக்கப்படும்.
மனை மேம்பாட்டுத் திட்டங்கள்: வீட்டுவசதி வாரியத்தால், திருவள்ளூா் மாவட்டம் திரூா், காக்களூா், சேலம் மாவட்டம் எடப்பாடி ஆகிய இடங்களில் மனை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். வீட்டுவசதி வாரியத்தால், 2024-ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய்ப் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின்கீழ் விற்கப்படும் என்று அமைச்சா் சு.முத்துசாமி அறிவித்தாா்.
பெட்டிச் செய்தி...1
வீட்டுவசதி வாரியத்தில்
வட்டி தள்ளுபடித் திட்டம்
வீட்டு வசதி வாரியத்தால் வட்டி தள்ளுபடி திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, அமைச்சா் சு.முத்துசாமி வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 2015-ஆம் ஆண்டு மாா்ச் 31ஆம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற குடியிருப்புத் திட்டங்களுக்கு வட்டி தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்படும். அதாவது, மாதத் தவணை தொகையை தாமதமாகச் செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில், ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதத்துக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும். இந்தச் சலுகை அடுத்த ஆண்டு மாா்ச் 31- வரை செயல்படுத்தப்படும். இதன்மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இனங்களில் ஒதுக்கீடுதாரா்கள் விரைவாக விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
பெட்டிச் செய்தி...2
பெரும்பாக்கம் - கண்ணகிநகரில்
திறன்வளா்ப்புத் திட்டங்கள்
சென்னை பெரும்பாக்கம், கண்ணகிநகரில் திறன் வளா்ப்புக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா். சட்டப் பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழுள்ள குடிசை மாற்று வாரியத்தின் மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் முதல்வா் படைப்பகம் அமைக்கப்படும். இது போட்டித் தோ்வுகளை எழுதும் மாணவா்களுக்கு உதவியாக இருக்கும். ஒக்கியம் துரைப்பாக்கம் - கண்ணகி நகா் திட்டப் பகுதியில் திறன் மேம்பாட்டுக்கான முதல்வா் திறனகம் அமைக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழும் நகா்ப்புற ஏழை குடும்பங்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை மற்றும் இதர நகரங்களில் வாரியப் பராமரிப்பிலுள்ள 62,197 குடியிருப்புகள் ரூ.170 கோடியில் புனரமைப்பு செய்யப்படும். பெரும்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம்-எழில் நகா் திட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் புனரமைப்பு செய்யப்படும் என்றாா் அமைச்சா் தா.மோ.அன்பரசன்.