"நீட் முழுக்க பணம்தான் விளையாடுகிறது; வினாத்தாள் முதல் ரிசல்ட் வரை எல்லாம் குளறு...
குழந்தை கடத்தல் கும்பல் கைது! வாங்கியோர், விற்றோர் விவரங்கள் சேகரிப்பு!!
சேலம் : கொங்கு மண்டலத்தில் குழந்தைகளை வாங்கி விற்பனையில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் நகர ஜோதிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் 43. இவர் மீது பண மோசடி புகார் தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் ஈரோட்டில் இருந்து ஆண் குழந்தையை வாங்கி வந்து சேலத்தில் விற்றதும் அதற்கு அவரது மனைவி நாகசுதா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
அத்துடன் குழந்தையை வாங்கி கொடுத்த ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன் பானு, பத்மாவதி ஸ்ரீதேவி ஆகியோர் சேர்ந்து இதுவரை மோகன்ராஜ் மூலம் மூன்று குழந்தை விற்று இருப்பதும் மூன்று ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் இன்று அதிகாலை மோகன்ராஜ், நாகசுதா, பர்வீன் பானு, பத்மாவதி, ஜனார்த்தனன் ஸ்ரீதேவி ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் குழந்தை இல்லாத தொழிலதிபர்களுக்கு குழந்தைகளை ஏழை எளியவர்களிடமிருந்து சட்ட விரோதமாக வாங்கி பல லட்சங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இவர்கள் இதுவரை கடந்த மூன்று ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்றதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
மேலும் இவர்கள் யார் யாருக்கெல்லாம் குழந்தையை விற்பனை செய்தனர்?யார் யாரெல்லாம் குழந்தையை வாங்கினர்? என்பது குறித்து பட்டியல் தயார் செய்து போலீசார் கிடுக்குபிடி விசாரணையை துவக்கியுள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.