கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ காலமானார்!
பிரபல கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ 87 வயதில் காலமானார்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் முக்கியமான எழுத்தாளராக அறியப்படும் கூகி வா தியாங்கோ தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதி வந்தார். பின்னர் காலனித்துவ எதிர்ப்பின் காரணமாக தனது சொந்த மொழியிலேயே எழுதிப் புகழ்பெற்றார்.
அரசுக்கு எதிராக எழுதியதால் 1970ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் வசித்து வந்த கூகி வா தியாங்கோ தனது 87ஆவது வயதில் இறந்ததாக அவரது மகள் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.
கூகி வா தியாங்கோ இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கட்டுரை என எழுதியுள்ளார். நோபல் பரிசுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தமிழில் இவரது நாவல்கள், சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அவரது நாவல்களான இடையில் ஓடும் நதி, சிலுவையில் தொங்கும் சாத்தான், கறுப்பின மந்திரவாதி, மீள் வருகை (சிறுகதைகள்) மிகவும் புகழ்பெற்றவை.
கூகி வா தியாகோ இறப்பு குறித்து அவரது மகள், “எனது தந்தை இறந்துவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த அவர் நன்றாகப் போராடினார்” எனக் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், வாசகர்கள் கூகி வா தியோங்கோவிற்கு இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கென்யாவின் எதிர்கட்சி தலைவர் மார்த்தா வாங்கரி கருவா தனது சமூக வலைதள பக்கத்தில், “புகழ்பெற்ற எழுத்தாளர், பேராசிரியர் கூகி வா தியோ மறைவுக்கு அவரது குடும்பம், நண்பர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மண்ணின் மைந்தன், சிறந்த தேசப்பற்று மிக்க கூகி வா தியாங்கோவின் அடிசுவடுகள் காலத்தினால் அழியாது நிற்கும்” எனக் கூறியுள்ளார்.