சாவா்க்கா் பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய ராகுலின் மனு தள்ளுபடி
மீண்டும் மீண்டுமா? ரூ.500 கள்ளநோட்டுப் புழக்கம் 37% அதிகரிப்பு: ஆர்பிஐ கவலை
நாட்டில் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 37% கூடுதலாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
2024 - 25ஆம் நிதியாண்டில் மட்டும் நாட்டில் 1.18 லட்சம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 சதவீதம் அதிகம் என்றும் ஆர்பிஐ வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அது மட்டுமல்ல, வேறெந்த ரூபாய் நோட்டுகளையும் விட 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 1.18 லட்சம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் என்ற நிலையில், கடந்த ஆண்டில் 85,711 தாள்கள் பிடிப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ வெளியிட்ட விவரங்களின்படி, கடந்த நிதியாண்டில் 1.18 லட்சம் எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.5.88 கோடி.
இதுமட்டுமல்ல, 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 51,000 எண்ணிக்கையிலும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 32,660 எண்ணிக்கையிலும் வங்கிகள் கண்டறிந்துள்ளன. 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 3,508 எண்ணிக்கையில் புழக்கத்தில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஆறுதல் தகவல் என்னவென்றால், கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாகக் கண்டறியப்பட்ட கள்ள ரூபாய் நோட்டு எண்ணிக்கை 2.23 லட்சம் தாள்கள் என்ற நிலையில், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2.18 லட்சம் கள்ளநோட்டுகள் என்ற அளவில் குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, கடந்த 2018 - 19ஆம் நிதியாண்டு முதல் 2023 - 24ஆம் நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் கள்ள நோட்டு புழக்கமானது 300 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில்,
ரிசர்வ் வங்கியின் நிகர லாபம் ரூ.2.7 லட்சம் கோடி என்று ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கையிருப்பு தங்கத்தின் மதிப்பு ரூ.4.32 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது 879 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக ஆர்பிஐ கூறியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு 23,953 வங்கி மோசடிகள் நடைபெற்றதாகவும் அதில் தனியார் வங்கிகளில் மட்டும் 14,233 மோசடிகள் நடந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.