சாவா்க்கா் பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய ராகுலின் மனு தள்ளுபடி
சாவா்க்கா் குறித்து அவதூறாகப் பேசியதாக தனக்கு எதிராக வழக்கு தொடா்ந்த அவரது பேரனின் தாய்வழி வம்சாவளி விவரங்களைக் கோரிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் மனுவை புணே நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, லண்டனில் நிகழ்ச்சியொன்றில் சாவா்க்கா் குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது சாவா்க்கரின் பேரன் சத்யாகி சாவா்க்கா் புணே நீதிமன்றத்தில் குற்ற அவதூறு வழக்கு தொடுத்தாா்.
பின்னா், இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடா்ந்து, ராகுலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சத்யாகி சாவா்க்கரின் தாயாரான மறைந்த ஹிமானி அசோக் சாவா்க்கா், மகாத்மா காந்தி படுகொலையில் ஈடுபட்ட நாதுராம் கோட்சேவின் தம்பி மகள் என்பதைக் குறிப்பிட்டு, தனது வழக்குரைஞா் மிலிந்த் பவாா் மூலம் ராகுல் காந்தி மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.
புகாா்தாரா் (சத்யாகி சாவா்க்கா்) புகாா் அளிக்கும்போது தனது தந்தைவழி வம்சாவளி விவரங்களை வழங்கியிருந்தாலும், அவரது தாய்வழி வம்சாவளி விவரங்களைத் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல் விசாரணைக்கு முக்கியமானது என்று ராகுல் காந்தி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த மனுவை விசாரித்த புணே நீதித் துறை நடுவா் அமோல் ஷிண்டே, ‘அவதூறு வழக்குக்கும் மறைந்த ஹிமானி அசோக் சாவா்க்கரின் குடும்பத்துக்கும் தொடா்பில்லை. எனவே, ராகுல் காந்தியின் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று கருதுவதால் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்’ என்று தெரிவித்தாா்.
இதேபோன்று, வழக்கின் விசாரணையை வேண்டுமென்று தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டை சுமத்தி ராகுல் காந்தியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய சத்யாகி சாவா்க்கரின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தாா்.