Mumbai Indians: "அப்படிச் செய்திருந்தால் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும்" - ஹர்திக் சொல்வதென்ன?
அகமதாபாத் மைதானத்தில் ஸ்ரேயஸ் தலைமையிலான பஞ்சாப் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும் இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான குவாலியர் 2-ல் நேற்று (ஜூன் 1) மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் பவுலிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.
அதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா - பிரசிம்ரன் ஓப்பனிங் கூட்டணி ஏமாற்றமளித்தாலும், ஜோஷ் இங்கிலிஷ், நேஹல் வதேராவின் சிறப்பான பங்களிப்போடு, கேப்டனாக கடைசி வரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்று 19 ஓவரிலேயே இலக்கை எட்டி அணியை வெற்றிபெற வைத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் ஸ்ரேயஸ்.

மறுபக்கம், தன்னுடைய கேப்டன்சியில் முதல்முறையாக மும்பையை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற்றிய ஹர்திக், கேப்டனாக மும்பைக்கு கோப்பையை வென்று கொடுக்கும் வாய்ப்பை இந்த சீசனில் தவறவிட்டார்.
முக்கியமாக, தங்களின் ஆஸ்தான பவுலர் 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுத்துக்கொடுக்காமல் 40 ரன்கள் கொடுத்தது மும்பைக்குப் பெரிய ஏமாற்றம்.
தோல்விக்குப் பின்னர் பேசிய ஹர்திக், "ஸ்ரேயஸ் பேட்டிங் செய்த விதம், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டது, விளையாடிய சில ஷாட்கள் ஆகியவை உண்மையில் மிகச் சிறப்பாக இருந்தன.
நிச்சயமாக அவர்கள் நன்றாக பேட்டிங் ஆடினார்கள் என்று நினைக்கிறேன். மைதானம் இருவருக்கும் சமமாகத்தான் இருந்தது.
பந்துவீச்சில் கூடுதல் செயல்திறன் தேவைப்பட்டது. இதுபோன்ற பெரிய ஆட்டங்களில் அது மிகவும் முக்கியமானது.

அவர்கள் மிகவும் அமைதியாக இருந்தார்கள். எங்களை அழுத்தத்துக்குள்ளாக்கினார்கள். நாங்கள் நினைத்தபடி செயல்படமுடியவில்லை.
எங்களில் யாரவது ஒருவர் சரியான லென்த்தில் பந்துவீசியிருக்கலாம். சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளர் பந்து வீசியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் முடிவு கொஞ்சம் வேறுமாதிரி இருந்திருக்கும்." என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, "கடைசி 4 ஓவர்க nuளில் 41 ரன்கள் தேவைப்பட்டபோது 17-வது ஓவரை பும்ரா வீசியிருந்தால் (போட்டியில் போல்ட் வீசியிருந்தார்) எதிரணிக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம், அதன்பிறகு மற்ற பவுலர்கள் கொண்டு சென்றிருப்பார்கள் என்று தோன்றியதா?" என்று ஹர்த்திக்கிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு, "பும்ராவுக்கு சூழ்நிலை தெரியும். 18 பந்துகள்தான் மீதமிருந்தது என்றாலும், பும்ரா பும்ராவாக செயல்படுவார். அவரால் எதாவது ஸ்பெஷலாக செய்ய முடியும். ஆனால், இன்று அது நடக்கவில்லை" என்று ஹர்திக் கூறினார்.