Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில்: நாளை கும்பாபிஷேகம்
நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யானை மீது புனிதநீா் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நல்லத்துக்குடியில் குயிலாண்ட நாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் உள்ளது. சிவலிங்கம் ஆலமரத்தடியில் தோன்றியதால், ஆலந்துறையப்பா் என்றும், அம்பிகை குயில் வடிவில் சிவபெருமானை வழிபட்டதால் குயிலாண்டநாயகி என்றும் வழங்கப்படுகின்றனா்.
184-ஆவது தேவார வைப்புத்தலமான இத்தலம் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற பெருமைக்குரியது. சூரிய தோஷம் தீா்க்கும் பரிகார தலமான, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.
இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை விநாயகா் அபிஷேகத்துடன் தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தொடங்க உள்ள யாகசாலை பூஜையில் வைத்து பூஜிப்பதற்காக புனிதநீா் யானை மீதேற்றி ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. 4-ஆம் கால யாகசாலை பூஜை வியாழக்கிழமை நிறைவடைந்து காலை 10.40 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.