யார் அந்த சார்? என இனி கேள்வி எழுப்பினால்.. நீதிமன்ற அவமதிப்பு: வழக்குரைஞர் மேரி ஜெயந்தி
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதால், யார் அந்த சார்? என இனி கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பு என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி கூறியிருக்கிறார்.
நீதிமன்ற வளாகத்தில், அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஜெயந்தி பேசுகையில், ஞானசேகரனின் பின்புலத்தில் யாரும் இல்லை. சம்பவம் நடந்த போது, அவரது செல்ஃபோன் ஃபிளைட் மோடில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டுவதற்காகவே, தானும் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்தான் என ஏமாற்றும் வகையில், ஃபிளைட் மோடில் இருந்த செல்போனில், பேசுவது போல ஞானசேகரன் ஏமாற்றியிருக்கிறார்.
அவரது போனுக்கு, சம்பவத்தின்போது எந்த அழைப்பும் வரவில்லை, அவருக்கும் எந்த அழைப்பையும் மேற்கொள்ளவில்லை என்பது செல்போன் சேவை நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், சம்பவ நேரத்தில், சம்பவ நாளன்று, ஞானசேகரனுக்கு வந்த அழைப்புகள் அனைத்தையும் ஆதாரமாக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிபுணர் வாய்மொழி சாட்சியாகவும் நீதிமன்றத்தில் அளித்திருக்கிறார். மேலும், ஞானசேகரன் பயன்படுத்தியது ஏர்டெல் சிம். அந்த செல்போன் சேவை நிறுவனத்தின் மண்டல அலுவலர், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்துள்ளார். அதன்படி, ஞானசேகரனுக்கு சம்பவம் நடந்த 23ஆம் தேதி முதல் அழைப்பே மாலை 6 மணிக்குத்தான் வந்துள்ளது. பிறகு அவரது செல்போன் பிளைட் மோடியில் சென்றிருக்கிறது. பிறகு, இரவு 8.52 மணிக்குத்தான் முதல் எஸ்எம்எஸ் வருகிறது. அதுவும் மிஸ்டு கால் அழைப்பு தொடர்பான எஸ்எம்எஸ் அது என்று தெரிவித்துள்ளார்.
எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் வகையில்தான், அவர் போனில் பேசியிருக்கிறார். மேலும், தானும் பல்கலை ஊழியர் என்று ஏமாற்றும் வகையில் அவர் பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், ஞானசேகரனுக்கு அழைப்பு எதுவும் வரவில்லை என்பதையும் பாதிக்கப்பட்ட பெண்ணே உறுதி செய்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, இத்தனை ஆதாரங்களையும் தாண்டி, இந்த சம்பவத்தில் மற்றொருவருக்கு தொடர்பிருக்கலாம் என நீதிமன்றத்துக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தால், மற்றொரு நபரையும் குற்றவாளி என வழக்கில் சேர்த்து, இன்று தண்டனை வழங்கியிருக்கலாம். ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளது.
எனவே, இனியும் யார் அந்த சார் என்று கேள்வி எழுப்புவது நீதிமன்ற அவமதிப்புதான் என்றும், இந்த வழக்கில் யாருமே பிறழ்சாட்சியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி 19 வயதான இரண்டாமாண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இதுதொடா்பான புகாரின்பேரில் கோட்டூா்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று, பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, மே 28ம் தேதி ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஐந்து மாதங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், இன்று குற்றவாளிக்கான தண்டனை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை குறைப்பின்றி ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று தண்டனை விவரம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அரசுத் தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி, மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் செல்போனை ஆதாரமாகக் கொண்டு, அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் ஞானசேகரன் மட்டுமே ஈடுபட்டுள்ளார் என்பதையும், அவருக்குப் பின்புலத்தில் வேறு யாரும் இல்லை என்பதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனை மகளிர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கும் நிலையில், இனி யார் அந்த சார் என கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.