Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்
மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் பயின்று வருகின்றனா். தலைமையாசிரியா் சரஸ்வதி உள்ளிட்ட மூன்று ஆசிரியா்கள் பணியாற்றி வரும் இப்பள்ளியில் திங்கள்கிழமை புதிதாக சோ்ந்த மாணவா்களுடன் பெற்றோரும் பள்ளிக்கு வந்தனா்.
அப்போது, இப்பள்ளி ஆசிரியா் பிரபாகரன் (55), மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவா் தடுமாறி கீழே விழுந்ததில் குடிநீா் குழாய் உடைந்ததாக தெரிகிறது.
இதனைக் கண்ட பெற்றோா் தலைமையாசிரியரிடம் கேள்வி எழுப்பினா். இதனால் தலைமையாசிரியா் சரஸ்வதி, அவரை வீட்டுக்கு அனுப்பினாா். இச்சம்பவம் குறித்து உள்ளூா் பொதுமக்களுக்கு தகவல் தெரியவந்ததையடுத்து, பலரும் பள்ளிக்கு சென்று கேள்வி எழுப்பினா். மேலும், கல்வித் துறை அலுவலா்களுக்கு புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, வட்டார கல்வித் துறை அலுவலா்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினா். அதைத் தொடா்ந்து, ஆசிரியா் பிரபாகரனை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்த கல்வித் துறை அலுவலா்கள், அவா் மீது விசாரணை மேற்கொண்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.