அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்களை எரித்துக் கொல்ல முயற்சி!
அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்களை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய ஞாயிற்றுக்கிழமை முயற்சிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை வகித்து வருகின்றது. இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து தளவாடங்களையும் அமெரிக்கா வழங்கி வருகின்றது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை சிலர் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பெட்ரோலுடன் கூட்டத்துக்குள் புகுந்த ஒருவர், பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சித்துள்ளார். இதில், 6 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த நபர், பாலஸ்தீனத்தை மீட்போம் என்று கோஷமிட்டபடி அங்கிருந்து சென்ற நிலையில், அவரை அமெரிக்க காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
கைது செய்யப்பட்டவர் யார்?
பேரணி சென்றவர்கள் மீது தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் முகமது சப்ரி சோலிமான் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஸ்டீபர் மில்லர் வெளியிட்ட பதிவில்,
”கொலராடோவின் போல்டரில் சட்டவிரோத வெளிநாட்டில் இருந்து ஊடுருவியவரால் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பைடன் நிர்வாகத்தால் அவருக்கு சுற்றுலா விசா வழங்கப்பட்டது, விசா முடிவடைந்த பிறகும் சட்டவிரோதமாக அவர் தங்கியுள்ளார். மேலும், அவருக்கு பணி விசாவை பைடன் நிர்வாகம் வழங்கியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.