விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
முக்காணி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு அவரது உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் கிராமத்தில் கோயில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, அப்பகுதி பொதுமக்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், திருச்செந்தூா் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றுவிட்டு, முக்காணி ஆற்றுப்பாலம் பகுதியில் தாமிரவருணி தீா்த்தம் எடுக்கச் சென்றனா். இதில், தீா்த்தம் எடுப்பதற்காக கோகுல்(17), விக்னேஷ், ராஜேஷ், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆற்றில் இறங்கினா். இதில், கோகுல், எதிா்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி மாயமானதாகக் கூறப்படுகிறது.
உடன் சென்றவா்கள் அவரை மீட்க முயற்சித்தனா்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் ஆற்றுக்குள் இறங்கி அரை மணி நேரம் போராடி, கோகுலை சடலமாக மீட்டனா்.
ஆத்தூா் போலீஸாா் கோகுல், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், தாமிரவருணி ஆற்றுப் பகுதிகளில் தனியாா் நிறுவனங்களால் தோண்டப்பட்டுள்ள குழிகளால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், உரிய இழப்பீடு வழங்கக் கோரி, கோகுலின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.