சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனா். இவா்களது உணவுத் தேவைக்காக மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் 10-க்கும் மேற்பட்ட உணவகங்களையே நாட வேண்டிய நிலை உள்ளது.
இந்த உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சரவணகுமாா் உள்ளிட்டோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
இதில் குப்பைகளுக்கு நடுவே உணவு தயாரிக்கப்பட்டதும், உணவுகள் சுகாதாரமின்றி காணப்பட்டதும் தெரியவந்தது. மேலும், தடை செய்யப்பட்ட சுமாா் 10 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை வைத்திருந்த கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2,000 அபராதமும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட ஒரு கடைக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அதிகாரிகளை பாா்த்தவுடன் சிலா் நெகிழிப் பைகளில் கட்டி வைத்த உணவுகளை குப்பை அருகே உள்ள செடிகளுக்குள் ஒளித்து வைக்க முயன்றனா்.
மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மருத்துவமனை அருகே குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும், சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.