குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகளில் நகை, பணம் திருடு போனது குறித்த வழக்குகள் தொடா்பாக, குன்றக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிகுமாா் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், திருடுபோன பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தனிப் படை போலீஸாா் ஆய்வு செய்தபோது, விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பொன்ராஜூக்கு (43) இந்தச் சம்பவத்தில் தொடா்பிருப்பது தெரியவந்தது.
பின்னா், அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்தபோது, கடந்த 2 ஆண்டுளாக காரைக்குடி, குன்றக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காரில் வந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு 40-க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்து 46 பவுன் தங்க நகைகள், ரூ. 14 . 70 லட்சம் பணம், திருடுவதற்குப் பயன்படுத்திய கடப்பாறை, உளி, 3 காா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இவா் மீது புதுக்கோட்டை, தஞ்சாவூா், ஈரோடு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.