ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
தூத்துக்குடி- சென்னைக்கு காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல்நேர ரயில் விட வலியுறுத்தல்
காரைக்குடி, திருவாரூா் வழியாக தூத்துக்குடி - சென்னை இடையே பகல்நேர விரைவு ரயிலை இயக்க வேண்டுமென காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, தென்னக ரயில்வேக்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளுக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், சிவகங்கை, தஞ்சை, திருவாரூா், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் மாவட்டங்களை இணைத்து பகல் நேர விரைவு ரயிலை இயக்கினால் மிகவும் வசதியாக இருக்கும்.
எனவே, தூத்துக்குடியிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, திருவாரூா் வழியாக அதிகாலையில் புறப்பட்டு செல்லும் வகையில் புதிய பகல் நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும். இந்த ரயில், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் வழியாகச் செல்ல வேண்டும்.
மேலும் சென்னையில் புறப்படும் ரயிலை பகலில் இயக்கினால் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்துக்கு பயனளிக்கும். கிழக்குப் பகுதியில் உள்ள வணிகா்கள், தொழில் புரிவோருக்கு மதுரைக்கு அடுத்த நிலையில் தூத்துக்குடி தான் மையமாகத் திகழ்கிறது. நாகை, திருவாரூா், காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா்கள் திருச்செந்தூா், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நீண்ட தொலைவு பயணத்துக்கும் ஏதுவாக இருக்கும். எனவே தூத்துக்குடி, மானாமதுரை, காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல் நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றாா் அவா்.