நிதி நிறுவன மோசடி: சிபிஐ விவரம் சேகரிப்பு
மத்திய பிரதேச நிதி நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டத்தில் ஏமாற்றப்பட்ட பொதுமக்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தங்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு 6.5 ஆண்டுகளில் இரட்டிப்பு பணம் தருவதாக மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பரிவாா் டெய்ரீஸ் நிறுவனம் கடந்த 2010 -இல் கூறியது. இதை நம்பி பலரும் அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனா். 2015-இல் இந்த நிறுவனத்தினா் தலைமறைவாகினா்.
இதுகுறித்து, மதுரை பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உயா்நீதிமன்றம் 11.9.2018-இல் உத்தரவிட்டது. இதன்படி, சிபிஐ பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்கை விசாரித்து வருகின்றனா்.
இதில் பலரை சிபிஐ கைது செய்ததுடன், அந்த நிறுவனம் தொடா்பான சொத்துகளையும் முடக்கியது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்களிடமிருந்து சிபிஐ போலீஸாா் விவரங்களை சேகரித்து வருகின்றனா்.
சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம், பெரம்பலூா், தஞ்சாவூா், ஈரோடு, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், மாா்த்தாண்டம் ஆகிய 13 இடங்களில் பொதுமக்கள் தங்களது ஆவணங்களை வழங்கலாம் என சிபிஐ அறிவித்தது.
இதன்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை மத்திய புலனாய்வுப் பிரிவு ஆய்வாளா் தினேஷ், உதவி ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்ட விசாரணை முகாமில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரில் வந்து தங்களிடமிருந்த அசல் ஆவணங்களைக் கொடுத்து பதிவு செய்தனா்.
இதுகுறித்து மத்திய குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளா் தினேஷ் கூறியதாவது: ஜூன் 3 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விசாரணை முகாம் நடைபெறுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ஆவணங்களைக் கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா். ஏதேனும் சந்தேகம் அல்லது தெளிவு தேவைப்பட்டால், அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு, மத்திய புலனாய்வுப் பிரிவை 044-24461959 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மத்திய புலனாய்வுத் துறை பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு வெளியிட்டது.