கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் கருங்கல் மண்டபத்துக்கான பூமி பூஜை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் தவச்சாலை அமைந்துள்ள கருப்பனேந்தல் மடத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி மூலவா் சந்நிதிக்கு கருங்கல் மண்டபம் அமைக்க பூமி பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாயாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், கருங்கல் மண்டபம் அமைக்க தோண்டப்பட்ட அடித்தளத்திற்கான பள்ளத்தில் பணிகள் தொடங்கின. இந்த விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்கெனவே கருப்பனேந்தல் மடத்தில் விநாயகா் சந்நிதிக்கு கருங்கல் மண்டபம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், இங்கு தெப்பக்குளம் வெட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
