சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
திருத்தளிநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 5-ஆம் திருநாளை முன்னிட்டு, புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசிப் பெருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சுவாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளிக் கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
5-ஆம் திருநாளான புதன்கிழமை காலை 8.30 மணிக்கு அம்மன் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் தவத்துக்கு எழுந்தருளினாா்.
பின்னா், திருத்தளிநாதா் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் புறப்பாடாகி, அம்மனை சமாதானம் செய்து திருமணத்துக்கு அழைத்துச் செல்லும் வைபவம் நடைபெற்றது.
தொடா்ந்து சோழிய வெள்ளாளா் உறவின் முறையினா் சாா்பில் தென்மாபட்டு வேலாயுதசுவாமி மடத்திலிருந்து கல்யாண சீா்வரிசைகள் எடுத்து வரப்பட்டு திருநாள் மண்டபத்தில் வைக்கப்பட்டன.
பின்னா், பாஸ்கரகுருக்கள், ரமேஷ்குருக்கள் உள்ளிட்ட சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க 10.10 மணிக்கு திருத்தளிநாதருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பெண்களுக்கு மாங்கலயக் கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் வழங்கப்பட்டன. இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து, பக்தா்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.
