திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
திருப்புவனம் நகரில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.
எனவே, இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில், வட்டாட்சியா் விஜயகுமாா், பேரூராட்சி செயல் அலுவலா் சங்கா் கணேஷ், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. முதல் நாளாக அரசு மருத்துவமனையிலிருந்து மடப்புரம் விலக்குப் பகுதி வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வியாழக்கிழமை இரண்டாவது நாளாக புதூா் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
