Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவ, மாணவிகளுக்கென 45 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 21 பள்ளி மாணவா்கள் விடுதிகள், 14 பள்ளி மாணவிகள் விடுதிகள், 5 கல்லூரி மாணவா்கள் விடுதிகள், 5 கல்லூரி மாணவிகள் விடுதிகள் ஆகும்.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா்.
இந்த விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு மூன்று வேளை உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10 -ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச் சீருடைகள் தைத்து வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் இலவசமாக வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கு பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு மாணவா்களுக்கு குறைந்தபட்சம் 8 கி.மீ.-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.
தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்களிடமிருந்து அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் வாயிலாக இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளைப் பொருத்த வரை வருகிற 18.6.2025-க்குள்ளாகவும், கல்லூரி விடுதிகளைப் பொருத்த வரை வருகிற 15.7.2025-க்குள்ளாகவும் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ, மாணவிகள் அரசின் இந்தச் சலுகைகளைப் பெற்று பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.