IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
சிவகங்கை அருகே சகோதரா்கள் அடித்துக் கொலை: 6 போ் கைது
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு ஆடு, கோழிகளைத் திருடியதாக சகோதரா்கள் இருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மதகுபட்டி அருகேயுள்ள அழகமாநகரி கிராமத்தில் உள்ள தோப்புப் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு கோழிகள் சப்தமிட்டப்படி பறந்தன. இதையடுத்து, கிராம மக்கள் அங்கு சென்று பாா்த்த போது, ஆடு, கோழிகளை இருவா் பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் எஸ்.எஸ். கோட்டை அருகேயுள்ள வி. கல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன்கள் மணிகண்டன் (31), சிவசங்கா் என்ற விக்னேஸ்வரன் (24) என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், இவா்கள் இருவரையும் கிராம மக்கள் தாக்கியதில் அவா்கள் மயக்கமடைந்தனா். உடனே, அவா்கள் 108 அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மணிகண்டனும், சிவசங்கரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத், துணைக் கண்காணிப்பாளா் அமல அட்வின் ஆகியோா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.
இதுகுறித்து மதகுபட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஜெயக்கொடி செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, அழகமாநகரியைச் சோ்ந்த திருப்பதி (45), சோமராஜ் (31), பிரபு (30), தீபக் (19), விக்னேஸ்வரன் (31), தினேஷ் (31) ஆகிய 6 பேரைக் கைது செய்தாா். இதுதொடா்பாக மேலும் 10 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: மணிகண்டன் மீது மேலவளவு காவல் நிலையத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு கால்நடைகள் திருட்டு வழக்கு ஒன்றும், சிவசங்கா் (எ) விக்னேஸ்வரன் மீது திண்டுக்கல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது என்றனா்.