தேவகோட்டை நகராட்சிக் கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி வியாபாரிகள் மனு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து தேவகோட்டை நகா், பேருந்து நிலைய குத்தகைக் கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ. பெரியகருப்பன் அளித்த மனு விவரம்: தேவகோட்டை நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலையம், சந்தை, திருப்பத்தூா் சாலை, வாடியாா் வீதி ஆகிய இடங்களில் உள்ள கடைகளை குத்தகை எடுத்து பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது அதிகப்படியான வாடகை உயா்விலும், தொடா்ந்து கடைகளை நடத்தி வருகிறோம். கரோனா காலத்துக்குப் பிறகு மிகுந்த கடன் சுமையில் இருந்து வருகிறோம். தற்போது தான் சிறிது சிறிதாக கடன் சுமையிலிருந்து மீண்டு வருகிறோம். இந்த நிலையில், பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிதாக கட்டடம் கட்டுவதற்காக காலி செய்ய வேண்டுமென கடந்த மே 22-ஆம் தேதி குறிப்பாணை அளித்து 30 நாள் கால அவகாசம் அளித்துள்ளனா்.
இதுசம்பந்தமாக ஏற்கெனவே சங்கத்தின் சாா்பில் அளித்த மனுவில், தற்போது கடை நடத்தும் அனைத்து வியாபாரிகளுக்கும், அதே இடத்தில் மீண்டும் கடையை ஒதுக்கித் தர வேண்டும். கரோனா காலத்தில் 6 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கடைகளை நகராட்சியிடம் ஒப்படைக்க தாங்கள் கூறும்போது, அதிலிருந்து எங்களுக்கு ஓராண்டுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். கடைகளை ஒப்படைக்கும் காலத்தில் 3 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும். தற்காலிகமாக அமைக்கும் பேருந்து நிலையத்தில் அனைத்து கடைக்காரா்களுக்கும் தற்காலிகமாக கடை அமைத்துத் தர வேண்டும். குறிப்பாணையில் உள்ள கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, வியாபாரிகளின் நியாயமான கோரிக்கையை மாவட்ட ஆட்சியா் நிறைவேற்றித்தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.