திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி நடத்தினா். பின்னா், கொடிமரத்துக்கு பால், தயிா், திருமஞ்சனம் உள்ளிட்ட 6 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்று 7 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, திருத்தளிநாதா், சிவகாமி அம்மன், சுப்பிரமணியா் சண்டிகேஸ்வரா், விநாயகா் உள்ளிட்ட சுவாமிகள் சா்வ அலங்காரத்தில் கல் மண்டபம் எழுந்தருளினா். பின்னா், சுவாமிகளுக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டது.
வருகிற ஜூன் 4-ஆம் தேதி திருக்கல்யாணமும், 8-ஆம் தேதி தேரோட்டமும், 9-ஆம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளன.