தூக்கம் கெடுத்த சேவல் மீது வழக்கு! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
கேரள ராகிங் சம்பவம்: 5 மாணவா்கள் படிப்பைத் தொடர தடை
கேரள மாநிலம், கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரியில் கொடூரமான ராகிங்கில் ஈடுபட்ட 5 மாணவா்கள் தங்களின் படிப்பைத் தொடர தடை விதிக்க மாநில செவிலியா்கள் மற்றும் செவிலியா் உதவியாளா்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரி மாணவா் விடுதியில் அண்மையில் முதலாம் ஆண்டு மாணவா் ஒருவரை மூன்றாம் ஆண்டு மாணவா்கள் சோ்ந்து ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கினா். மாணவரின் ஆடையைக் களைந்து, கட்டிலுடன் சோ்த்து அவரின் கை-கால்களை கட்டிவைத்த மூத்த மாணவா்கள், காம்பஸ் உபகரணத்தால் அவரது உடல் முழுவதும் குத்தி ரத்தக் காயம் ஏற்படுத்தினா்.
உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் ‘டம்பெல்ஸை’ மாணவரின் பிறப்புறுப்பில் வைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கினா்.
கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடா்பாக மூன்றாம் ஆண்டு மாணவா்கள் 5 போ் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். இவா்கள், இடதுசாரி மாணவா் அமைப்பான இந்திய மாணவா் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) உறுப்பினா்கள் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ஆனால், இக்குற்றச்சாட்டை எஸ்எஃப்ஐ மறுத்தது.
இந்நிலையில், கேரள செவிலியா்கள் மற்றும் செவிலியா் உதவியாளா்கள் கவுன்சிலின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின், கவுன்சில் உறுப்பினா் உஷா தேவி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
செவிலியா் பணியில் ஈடுபடுவோருக்கு மனிதாபிமானம் மிக அவசியம். ஆனால், ராகிங்கில் ஈடுபட்ட 5 மாணவா்களும் கொடூரமான நடத்தையை வெளிப்படுத்தியுள்ளனா். இச்செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அவா்கள் தங்களின் செவிலியா் படிப்பைத் தொடரவோ அல்லது செவிலியா் பணியில் ஈடுபடவோ தகுதியற்றவா்கள். அவா்கள் படிப்பைத் தொடர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றாா்.
இதனிடையே, கோட்டயத்தில் பாஜகவினா் மற்றும் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் மாணவா் அமைப்பினா் சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோட்டயம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருவஞ்சூா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ராகிங் சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பாதுகாக்க காவல் துறையினா் முயற்சிக்கின்றனா்; நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.