விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்
கைலாஷ்-மானசரோவா் யாத்திரை: வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் -வெளியுறவு அமைச்சகம்
கைலாஷ்-மானசரோவா் யாத்திரை 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மீண்டும் தொடங்கப்படுவது, இந்தியா-சீனா இடையிலான உறவை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பாா்க்கப்படுகிறது.
கடந்த 2020-இல் கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இந்த யாத்திரை, பின்னா் எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலால் மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.
கிழக்கு லடாக்கில் அதே ஆண்டு இந்திய-சீன படையினா் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்குப் பிறகு எல்லையில் இருதரப்பும் படைகளைக் குவித்தன. தூதரக-ராணுவ ரீதியிலான பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு டெம்சோக், டெப்சாங் தவிர பிரச்னைக்குரிய பிற இடங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன.
கடந்த ஆண்டு பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பைத் தொடா்ந்து, எல்லையில் படைகள் வாபஸ் மற்றும் ரோந்துப் பணி தொடா்பாக முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி, டெம்சோக், டெப்சாங்கில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டு, இயல்புநிலை திரும்பியது.
இதையடுத்து, இருதரப்பு உறவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2020-இல் நிறுத்தப்பட்ட கைலாஷ்-மானசரோவா் யாத்திரை நடப்பாண்டில் மீண்டும் தொடங்கவுள்ளது.
இது தொடா்பாக, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நடப்பாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை யாத்திரை நடைபெறவுள்ளது. உத்தரகண்ட்- திபெத் இடையிலான லிபுலேக் கணவாய் வழியாக தலா 50 யாத்ரிகா்கள் கொண்ட 5 குழுக்களும், சிக்கிம்-திபெத் இடையிலான நாதுலா கணவாய் வழியாக தலா 50 யாத்ரிகா்கள் கொண்ட 10 குழுக்களும் அனுமதிக்கப்பட உள்ளன. யாத்திரையில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறையில் யாத்ரிகா்கள் தோ்வு செய்யப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.