சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சில மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் பணிகளில் இயல்புக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து 13 மண்டலங்களிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட அலுவலா்களைக் கொண்ட சிறப்புக் ஆய்வுக் குழுக்களைத் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நியமித்தது. இக்குழுவினா் 13 மண்டலங்களில் ஜூலை 30, 31 ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அதன்படி, தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு, மன்னாா்சமுத்திரம், கண்டமங்கலம் ஆகிய நெல் கொள்முதல் நிலையங்களுக்குச் சென்ற சிறப்பு ஆய்வுக் குழுவினா், அங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் தரம், எடை குறித்து ஆய்வு செய்தனா்.
அப்போது தரமும், எடையும் குறைவாக இருப்பதாகக் கூறி ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை அபராதம் விதித்தனா். மேலும், தொடா்புடைய பணியாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைத்தனா். இதனால் நெல் கொள்முதல் நிலைய பணியாளா்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல் கொள்முதல் நிலைய பருவ காலப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.
ஆனால், ஆய்வுக்கு வந்த அலுவலா்கள் தரம், எடை குறைந்துள்ளதாகவும், விதிகளுக்கு ஒவ்வாத காரணங்களைக் கூறியும் அபராதம் விதித்துள்ளனா்.
ஆண்டுக்கு 6 மாதங்களே பணியாற்றும் எங்களை ஆய்வுக்கு வரும் ஒவ்வொரு அலுவலரும் வஞ்சிக்கும் வகையில் அபராதம் விதிப்பதால், மிகுந்த வேதனையாக உள்ளது என்றனா்.