இலங்கை கடற்படை சிறைப்பிடித்த படகையும் மீனவர்களையும் விடுக்கக் கோரிக்கை!
கோடை வெப்பம் : மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருந்து வருவதால் பொது மக்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் கூறியது: மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும், மோா் மற்றும் பழச்சாறுகளை குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.
மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது கட்டாயம் காலணி அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை எடுத்து செல்ல வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமா்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது.
கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்ட வேண்டும். போதிய தண்ணீா் கொடுக்க வேண்டும். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீா் கொடுக்க வேண்டும். பருவநிலை மாற்றங்களால் நிகழாண்டு கோடை வெப்பம் அதிகமாக உள்ளதால், மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயா்கள் உருகி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில் வசிப்பவா்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம்.
விலை உயா்ந்த பொருள்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். எரிவாயு உருளைகளை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீா் ஊற்றி அணைத்து விட வேண்டும் என்றாா்.