தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்க...
கோவை: திருமணம் கடந்த உறவில் பிறந்த ஒரு மாத குழந்தை சந்தேக மரணம் - உடலை தோண்டி பிரேத பரிசோதனை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இவர்களுக்கு இடையே உள்ள திருமணம் தாண்டிய உறவில் அந்தப் பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

கடந்த மாதம் அந்தப் பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் கடந்த உறவில் பிறந்த குழந்தை என்பதால், திருப்பத்தூரில் உள்ள ஒரு தம்பதிக்கு குழந்தையை சட்ட விரோதமாக விற்றுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்துள்ளது. அவர்கள் மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு கிணத்துக்கடவு பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தையின் உடல்நலம் மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துவிட்டது. குழந்தைகள் நல ஆணையம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தல்படி குழந்தையின் உடல் பொள்ளாச்சி டீச்சர்ஸ் காலனியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தாமதமாக தகவல் அறிந்த காவல்துறையினர் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடலை மீட்டு, இஎஸ்ஐ மருத்துவர் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக காவல்துறையிடம் கேட்டபோது, “குழந்தை மார்ச் 12-ம் தேதி உயிரிழந்துள்ளது. மார்ச் 13-ம் தேதி குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளனர். எங்களுக்கு மார்ச் 15-ம் தேதி தான் தகவல் தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்து நேற்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளோம். இதன் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றனர்.

சட்டவிரோதமாக குழந்தையை தத்தெடுத்த இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ‘சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.’ என்று குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பவண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
