தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம்: நாளை கனமழைக்கு வாய்ப்பு
கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் திரண்டதால் நெரிசல் - கோயில் நிர்வாகம்
பனாஜி: கோவா யூனியன் பிரதேசத்திலுள்ள பிச்சோலிம் பகுதியில் பிரசித்திபெற்ற 'ஸ்ரீ லய்ராயி திருக்கோயில்’ அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஜாத்ரா’ திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
விடியவிடிய நடைபெறும் இத்திருவிழாவில், இன்று(மே 3) அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராதவிதமாக கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 19 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தநிலையில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு ஒரேநேரத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து, லய்ராயி திருக்கோயில் நிர்வாகத்தின் தலைவர் திநாநாத் கோங்கார் கூறியிருப்பதாவது: ”கோயில் திருவிழாவில் சுமார் 50,000 முதல் 70,000 பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் இருந்த பக்தர் ஒருவர், கோயில் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்டிருந்த மின்சார விளக்கை எதிர்பாராதவிதமாக தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அவர் கூட்டத்தின் நடுவே மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பதறியடித்துக்கொண்டு ஓடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது” என்றார்.
எனினும், இந்த விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய வழக்குப்பதிந்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த விபத்து குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.