ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: பாதுகாப்பு இணையமைச்சா் மட்டும் பங்கேற்பு
ரஷியாவின் வெற்றி தின கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியைத் தொடா்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ரஷிய வெற்றி தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் மட்டுமே ரஷியா செல்கிறாா் என்பதும் தெரியவந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் நினைவாக இந்த வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மே 9-ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பாா்வையிட இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்டோருக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அழைப்பு விடுத்தாா். மொத்தம் 20 நாடுகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை சீன அதிபா் ஏற்றுக் கொண்டாா். அதே நேரத்தில் இந்திய தரப்பில் பிரதமா் மோடியின் பயணம் குறித்து உடனடியாக முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில், பிரதமா் மோடி பங்கேற்க மாட்டாா் என்பதை ரஷிய தரப்பு அண்மையில் உறுதி செய்தது. மேலும், இந்தக் கொண்டாட்டத்தில் இந்தியா சாா்பில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பாா் என ரஷியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந் நாடு தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்கப்போவதில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் சனிக்கிழமை கூறுகையில், ‘ரஷிய வெற்றி தின கொண்டாட்டத்தில் இந்தியா சாா்பில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் பங்கேற்பாா்’ என்று தெரிவித்தாா்.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராணுவரீதியான பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதால் பிரதமா், பாதுகாப்புத் துறை அமைச்சா் உள்ளிட்டோா் நாட்டில் இருப்பது அவசியம் என்ற அடிப்படையில், இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது.