சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!
சட்டப்படி, கையில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?
இந்திய நாட்டின் சட்டப்படி, ஒருவர் வீட்டில் அலுவலகத்தில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதில் உண்மை என்ன?
செய்தியை தொடர்ந்து வாசிக்கும் அல்லது கேட்பவர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி கேட்டிருப்போம். அதுதான் வீட்டில் அதிரடி சோதனை, ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது என்ற செய்தி.
வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பணத்தைக் கைப்பற்றினர் என்பது போன்ற செய்திகளைப் பார்க்கும் ஒருவருக்கு, நாட்டில் சட்டப்படி, ரொக்கமாக வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதிகபட்சமாக எவ்வளவுதான் பணம் வைத்திருக்கலாம் என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.
ஒருவர் கையில் ரொக்கமாகப் பணம் வைத்திருப்பது குறித்து விதி உள்ளதா? இருந்தால் அது சொல்வது என்ன? என்பது பற்றி பார்த்தால், அப்படி ஒரு உச்ச வரம்பே இல்லை.
உண்மை என்னவென்றால், அவ்வாறு வீட்டில், அலுவலகத்தில் அல்லது கையில் ரொக்கப் பணமாக வைத்திருக்க எந்தக் கட்டுப்பாடும், விதிமுறையும் இல்லை என்பதே.
உண்மையான நிலவரம் தெரியாமலேயே பலரும் கையில் பணம் வைத்திருந்தாலே அதனை பறிமுதல் செய்துவிடுவார்கள என்று கூட கருத முடியும்.
ஆனால், வீட்டிலோ, கையிலோ அலுவலகத்திலோ ரொக்கப் பணம் வைத்திருக்க எந்த உச்ச வரம்பும் கிடையாது. ஒருவர் இவ்வளவுதான் ரொக்கமாக வைத்திருக்க வேண்டும் என்று வருமான வரித்துறையும் எதையும் வரையறை செய்யவில்லை.
பணம் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்றால் பறிமுதல் செய்யப்படுவது ஏன் என்பதுதானே கேள்வி? அதற்குக் காரணம், அந்தப் பணம் எந்த வழியில் வந்தது. நேர்மையாக ஊதியமாக, சொத்து விற்றது என பணம் வந்த நேர்மையான வழிதான் முக்கியம். ஒருவேளை, ஒருவரிடம் பணம் இருந்து அது பறிமுதல் செய்யப்பட்டால் அது எந்த வழியில் சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்து ஆதாரங்களை சமர்ப்பித்தால் பணம் முழுமையாக அவரிடமே திரும்ப ஒப்படைக்கப்படும்.
பணம் ஆதாரம்தான் அடிப்படை
பணம் சம்பாதிக்கப்பட்டது எப்படி என்று தெரிவிக்கப்படாத வருவாய் அல்லது சொத்துகள் தொடர்பாக விளக்குகிறது வருமான வரிச் சட்டப் பிரிவு 68 மற்றும் 69பி.
ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் அல்லது சொத்து விவரம் பற்றி அவரால் விளக்க முடியாவிட்டால் அது வருவாய்க்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்தாகக் கருதப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். அந்த அபராதத் தொகை 78 சதவீதம் வரை இருக்கலாம்.