இ-சிகரெட் பாதுகாப்பானது இல்லையா? புகைப்பிடிப்பதை நிறுத்த உதவாதா?
சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதற்கான ஒரு உபாயமாக, இ-சிகரெட் தோல்வியே அடைந்திருப்பதாக மருத்துவர் நீது ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள பிஎஸ்ஆர்ஐ மருத்துவமனையின் நுரையீரல் அவசர சிகிச்சை மற்றும் உறக்கவியல் துறை நிபுணரான நீது ஜெயின், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில், தொடர்ந்து பல காலமாக இ-சிகரெட் பிடிப்பது ரத்த நாளங்களை சேதமடையச் செய்யும். அது இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்.
புகையிலைக்கு மாற்றாக, உடலுக்குப் பாதுகாப்பானது இ-சிகரெட் என மக்கள் கருதுகிறார்களே அது உண்மையா?
புகையிலை மற்றும் சிகரெட்டுகளுக்கு மாற்றாக இ-சிகரெட் இருக்கும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த கூற்று நீண்டகாலம் நீடிக்கவில்லை. இந்த புதிய சிகரெட்டில் இருக்கும் வேறு பொருள்கள் உண்மையிலேயே உடலுக்கு அதிகத் தீங்கினை ஏற்படுத்துகிறது. வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இ-சிகரெட்டில் வேறு பல பொருள்கள் கலந்திருப்பதாகவும், பாலிதீன், க்ளைகோல், கிளிசரின் மற்றும் அக்ரோலைன், ஃபார்மாடிஹைட் உள்ளிட்ட வாசனை தரும் பொருள்களும் அடங்கியிருப்பதாகவும் இதனைப் புகைக்கும்போது நுரையீரல் மட்டுமல்லாமல் இதய பாதிப்பும் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில், அக்ரோலைன் என்ற பொருள் கலந்திருப்பதாகவும், இது வழக்கமாக தேனீக்களைக் கொல்லப் பயன்படுத்தப்படுவதாகவும் இது நுரையீரலை கடுமையாக பாதிக்கும். எனவே, இந்த இ-சிகரெட்டில் இருக்கும் அல்ட்ரா-ஃபைன் பொருள்கள் எல்லாம் சேர்ந்து ஏற்படுத்தும் புகையானது, காரிலிருந்து வெளியேறும் புகைக்கு இணையானது. நினைத்துப் பாருங்கள், காரிலிருந்து வெளியேறும் புகையை நாம் சுவாசிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை, அது உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கினை. அது மட்டுமல்லாமல் இ-சிகரெட்டில் நிக்கல், தின், ஈயம் உள்ளிட்ட உலோகங்களும் கலந்திருக்கின்றன. இது உடலுக்கும் நுரையீரலுக்கும் மிகவும் தீங்கிணைக்கும் என்று கூறுகிறார்.