பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு
கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது:
கோவை சரவணம்பட்டி சங்கரா கல்லூரி சாலையில் உள்ள தனியாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சத்யபிரபு. இவரது மகன் சஞ்சீவ் (8), சின்ன மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் சத்யபிரபுவின் குடும்ப உறுப்பினா்கள் சரவணம்பட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வியாழக்கிழமை இரவு வாங்கிய பிரியாணி உணவை வீட்டில் சாப்பிட்டுள்ளனா். பின்னா் வியாழக்கிழமை நள்ளிரவு வரை சுறுசுறுப்பாக இருந்த சிறுவன் அதன் பின்னா் தூங்கியுள்ளாா்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு சிறுவனை எழுப்பச் சென்றபோது அசையாமல் படுத்து இருப்பதைக் கண்ட பெற்றோா் அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனா்.
அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பின்னரே சிறுவனின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.