ஜூன் 16 இல் ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சிறந்த தலைவன், தலைசிறந்த மனிதன்..! தோனி குறித்து உர்வில் படேல்!
இளம் சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் எம்.எஸ்.தோனி குறித்து நெகிழ்ச்சியானப் பதிவினை எழுதியுள்ளார். அதில் பல விஷயங்கள் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
2025 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு மோசமாக அமைந்தாலும் சில புதிய வீரர்கள் வருகை ஆறுதல் அளித்துள்ளது.
அந்த வகையில் வன்ஷ் பேடிக்கு மாற்றாக ரூ.30 லட்சத்துக்கு சிஎஸ்கே அணியில் வாங்கப்பட்டார்.
குஜராத்தைச் சேர்ந்த 26 வயதாகும் உர்வில் படேல் 3 ஐபிஎல் போட்டிகளில் 212.30 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் தோனி குறித்து கூறியதாவது:
நம்பமுடியாத வாய்ப்பு
எம்.எஸ்.தோனி தலைமையில் விளையாடும் நம்பமுடியாத வாய்ப்பு எனக்கு கிடைத்ததுக்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளேன்.
’தல’ உடன் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் அமைதி, தலைமைப் பண்பு, தன்னடக்கம் என எல்லாமே மாஸ்டர்கிளாஸாக இருந்தன.
ஏற்கனவே, அவருடன் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவரது வழிகாட்டுதலில் வளர ஆசைப்படுகிறேன்.
ஓய்வறை, களத்தில் அவருக்கு அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும் கனவு நனவானது போல் இருந்தது. கூடுதல் சிறப்பானது என்னவென்றால் இதையெல்லாம் எனது குடும்பமும் அங்கிருந்து அனுபவித்தார்கள். மறக்க முடியாத கணங்கள்.
சிறந்த தலைவன், தலைசிறந்த மனிதன்
தோனி என்னுடைய சீருடையில் ’சிறப்பான வாழ்த்துகள் உர்வில்’ என எழுதிக் கொடுத்தது எப்போதும் பிரேம் போட்டு வைத்துக்கொள்வேன்.
சிறந்த தலைவன், அதைவிடவும் சிறந்த மனிதரான அவருடன் உத்வேகமூட்டும் பயணமாக அமைந்தது எனக் கூறியுள்ளார்.
முதல் தரப் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர், சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிவேக சதம் அடித்தவர் என அசத்திய உர்வில் படேல் 40 பந்துகளுக்குக் குறைவாக 2 சதங்கள் விளாசியவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியது கவனிக்கத்தக்கது.