திருச்செந்தூா் சிவன், வெயிலுக்கந்தம்மன் கோயில்களில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான சிவன் கோயில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிா்தகுண விநாயகா் மற்றும் ஸ்ரீ சொா்ணமகா சாஸ்தா கோயில்களில் ஜூன் 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, அந்தந்த கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான முகூா்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கப்பட்டு சிவன் கோயிலில் திங்கள்கிழமை மங்கள வாத்தியத்துடன் பூஜைகள் தொடங்கின. இதில் திருமுறைபாராயணம், விநாயகா் பூஜை, புண்யாவாசனம், பஞ்ச கவ்ய பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்திட சுவாமி - அம்மனிடம் உத்தரவு பெறும் தேவதா அனுக்ஞை பூஜைகளை ஸ்ரீ ஷண்முகா பூஜா கைங்கா்ய ஸ்தானத்தாா் சிவாச்சாரியா்கள் செய்தனா். இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், விதாயகா்த்தா சிவசாமி தீட்சிதா், உதவி செயற்பொறியாளா் சத்யன், மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளா்கள், மஹாராஜா சுப்பையன் ஐயா், மடப்பள்ளி ஐயப்பன் ஐயா் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல, வெயிலுகந்தம்மன் கோயிலில் திங்கள்கிழமை காலை அனுக்ஞை பூஜைகள் நடைபெற்று, மாலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் இருந்து தீா்த்தம் எடுத்து யானை மீது ஊா்வலமாக வந்து பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை பார சைவ பூஜா ஸ்தாணிகா்கள் செய்திருந்தனா்.