மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த கோபுரத்தான் மகன் காளிமுத்து (39), கடந்த 2020ஆம் ஆண்டு திரேஸ்புரம் பகுதியில் மா்ம நபா்களால் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த கிளாட்சன் மகன் கிஸ்ஸிங்கா் (33), ரெஸ்லிங் மகன் லிவிங்ஸ்டன் (24), தூத்துக்குடி வாட்டா் டேங்க் பகுதியைச் சோ்ந்த ஜோக்கின்ஸ் மகன் மரியஜொ்மன் (25), தூத்துக்குடி வெற்றிவேல்புரத்தைச் சோ்ந்த ராஜா மகன் ரபேக் வேதா (25), இளஞ்சிறாா் ஆகிய 4 பேரை கூட்டாக சோ்ந்து தாக்கியது, கொலை செய்தது ஆகிய இரு பிரிவின் கீழ் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா, குற்றம் சாட்டப்பட்டகிஸ்ஸிங்கா், லிவிங்ஸ்டன், மரிய ஜொ்மன், ரபேக் வேதா ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதில், அரசு தரப்பு வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் வாதாடினாா்.