ஜூன் 16 இல் ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு!
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.6.2025 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக இன்பதுரை(அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்), தனபால் (முன்னாள் எம்எல்ஏ, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தொடரும் என்றும் 2026-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவாா்த்தையின்போது, தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கொடுப்பதாக பேசப்பட்ட நிலையில், தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஐஏஎஸ் கனவு என்றொரு மாயவலை!