Cannes 2025: கான் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் & ஜான்வி கபூர்; ரெட் கார்பெட் ...
ஆபரேஷன் சிந்தூரில் வேண்டுமென்றே ஏவப்பட்டதா பிரம்மோஸ்? எலி போல பாகிஸ்தான்!
மே 6-7ஆம் தேதி நள்ளிரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்திய ராணுவம், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களை மிகத் துல்லியமான இலக்காக நிர்ணயித்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மீது பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியப் படைகள், பாகிஸ்தானின் ரேடார் மையங்கள், உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் தளங்கள், ஆயுதக் கிடங்குகள், விமானப் படைத் தளங்களைக் குறிவைத்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசியது.
இந்த தாக்குதல் குறித்து, அமெரிக்காவின் நகர்ப்புற போர் நிபுணர் ஜான் ஸ்பென்ஸர் கூறுகையில், பாகிஸ்தானின் எந்தவொரு பகுதியையும், எந்த நேரத்திலும் தாக்கும் திறன் இந்தியாவிடம் இருப்பதை சிந்தூர் தாக்குதல் நிரூபித்துள்ளது. பிரம்மோஸ் ஏவுகணையின் ஈடு இணையற்ற வேகம், இலக்கை துல்லியமாக கணித்தல் உள்ளிட்டவை, சீனா மற்றும் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் எதிர்கொள்ள முடியாத வகையில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இது உண்மை.
பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவின் மிக அதிகவேக, மேம்படுத்தப்பட்ட பொறியியல் தொழில்நுட்பங்களுடன் இந்தியா - ரஷியா கூட்டாண்மையுடன் உருவாக்கப்பட்டது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. இது 2001ஆம் ஆண்டு முதல்முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
அது மட்டுமா? ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றது பிரம்மோஸ். இதன் வேகத்தால்தான், ரேடார்களில் இது கண்டறியப்பட்டாலும் அது தடுப்பு உக்தியை எதிரி நாடு கையாளத் தொடங்குவதற்குள் பிரம்மோஸ் பாய்ந்து சேதத்தை ஏற்படுத்திவிடும். இந்த ஏவுகணையை தடுத்து நிறுத்துவது அரிது. இலக்கு நகரும் அமைப்பாக அதாவது கப்பல் போன்று இருந்தாலும் கூட, துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் திறன் பெற்றிருக்கிறது.
இவ்வளவும் உறுதி செய்யப்பட்டாலும், பல முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருந்தாலும் கூட, ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இருக்கும் இடத்தில் பிரம்மோஸ் எவ்வாறு செயல்படும் என சோதனை செய்யப்படவில்லை. இது உண்மையான போரின்போதுதான் சோதிக்கப்படும்.
எதிரி நாட்டின் ரேடார்களில் பிரம்மோஸ் சிக்குமா? என்றும், அதன் எதிர் தாக்குதலை எதிர்கொள்ளுமா என்றும் நேரடியாக சோதிக்கப்படவில்லை. அதற்கு இப்போது கிடைத்துள்ளது ஒரு வாய்ப்பு.
இதற்கிடையே, விரைவில் பிரம்மோஸ் லைட் ஏவுகணைகளை இந்தியா கொண்டுவர விருக்கின்றன. இந்த பிரம்மோஸ் லைட் ஏவுகணைகளை, போர் விமானத்தில் வைத்து தாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்படவிருக்கிறது.
அதாவது, இந்தியா 'அடுத்த தலைமுறை' பிரம்மோஸ் ஏவுகணையை மற்ற இந்திய விமானப் படையின் போர் விமானங்களில் பொருத்தவும் திட்டமிட்டுள்ளது. அடுத்த தலைமுறை பிரம்மோஸ் அல்லது அதன் இலகுவான பதிப்பை, மிக்- 29, மிராஜ் 2000 மற்றும் இலகுரக போர் விமானம் தேஜாஸ் போன்ற சிறிய விமானங்களிலும் பொருத்தலாம் என்ற திட்டம் உள்ளது.
இவற்றுக்கு எல்லாம் ஒத்திகையாகவே, இந்திய ராணுவம் அதன் மணிமகுடமான துல்லியமான அதிவேகத்துடன் பாயும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை, பாகிஸ்தான் எல்லைக்குள் அதுவும் மிக ஆழமான ஊடுருவல் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியப் படைகள், பாகிஸ்தானில் இருந்த முக்கிய ராணுவ நிறுவல்களை குறிவைத்து - அதாவது வான் ரேடார் நிலையங்கள், கட்டளை மையங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை துல்லியமாகத் தாக்கி அழித்தது.
பல ஆண்டுகளாக சோதனைகளை நடத்தி முடித்திருந்தாலும் கூட, பிரம்மோஸ் ஏவுகணையின் முழு திறனும் உண்மையான போரின்போதுதான் தெரியவரும். அதன் வேகம், துல்லியம், தாக்கும் திறன் அனைத்தும் தற்போது உலகம் முழுவதுக்கும் பறைசாற்றப்பட்டுள்ளது.
பிரம்மோஸ் வெறும் ஏவுகணையல்ல, இந்தியாவின் தொழில்நுட்பத் திறன் மற்றும் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றியது குறித்த உலகுக்கு உரத்துச் சொல்லும் செய்தியாக மாறி நிற்கிறது.