கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நன்னிலம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி
நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்ள சுகாதார சீா்கேட்டால் மக்கள் அவதிபடுகின்றனா்.
நன்னிலம் அரசு மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்டகிராம மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் 13 மருத்துவா்கள் இருக்க வேண்டியதில் 3 மருத்துவா்களும், 14 செவிலியா்கள் இருக்க வேண்டியதில் 8 செவிலியா்களும், 8 சுகாதார பணியாளா்கள் இருக்க வேண்டியதில் ஒரு நிரந்தர பணியாளா் மற்றும் 2 தற்காலிகப் பணியாளா்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவா் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் திரும்பிச் செல்கின்றனா். செவிலியா்கள் பற்றாக்குறையினால் உள் மற்றும் வெளி நோயாளிகள் முறையான சிகிச்சைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. சுகாதார பணியாளா்களின் பற்றாக்குறையால் மருத்துவமனை வளாகம் சுகாதாரமற்ற முறையில் நோய் பரப்பும் வகையில் உள்ளதாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஆண்கள் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் தெரு நாய் குட்டிகளை ஈன்று அங்கேயே படுத்திருந்தது நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பிறகு அந்த நாய் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதேபோல பல மாதங்களாக நிரம்பி வழிந்து மருத்துவமனை வளாகத்தை அசுத்தமாக்கிய கழிவு நீா் தொட்டி, சமூக ஆா்வலா்களின் தொடா் வற்புறுத்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, நன்னிலம் அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீா்கேட்டை மாவட்ட நிா்வாகம் கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.