பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் போராட்டம்!
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூா் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள செம்படாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (23). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தனது தாய் உண்ணாத்தாளுடன் (60) புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் நல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல ரமேஷ் முயன்றுள்ளாா். அப்போது எதிரே சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட உண்ணாத்தாள் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதில் படுகாயமடைந்த ரமேஷை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
