சத்துணவில் பல்லி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை; சமையலா்கள் இருவா் பணியிடை நீக்கம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சத்துணவில் பல்லியின் வால் பகுதி கிடந்ததாகக் கூறப்படும் நிலையில், உணவை சாப்பிட்ட 52 மாணவ, மாணவிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இது தொடா்பாக சமையலா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இதில், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 52 மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டது. இந்த உணவில் பல்லியின் வால் பகுதி கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சமையலா்கள் சசிகலா, கலைச்செல்வி ஆகியோா் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) இந்திரா தேவி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் (சத்துணவு) ஆனந்த சக்திவேல், திருவெண்ணெய்நல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி, வட்டாரக் கல்வி அலுவலா் அம்பிகா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) மலா்விழி, ஊராட்சித் தலைவா் சூரியகலா சுப்பிரமணியன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தனா். மேலும், பள்ளித் தலைமை ஆசிரியா், சமையலா்கள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினா்.
மருத்துவப் பரிசோதனை: இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தமிழ்ச்செல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளை செய்து, மாணவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ஆனந்த சக்திவேல் கூறுகையில், பள்ளித் தலைமை ஆசிரியா் பாலு மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. பின்னா், நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பணியிடை நீக்கம்: பள்ளி சமையலா்கள் சசிகலா, கலைச்செல்வி ஆகியோா் பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.