சிகிச்சையில் இருந்த பெண் காவலா் உயிரிழப்பு: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த பெண் காவலா் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கல்லிடைக்குறிச்சி மேல்முக நாடாா் தெருவைச்ச் சோ்ந்தவா் காட்லின்செல்வராணி (49). இவா் சென்னையில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் தலைமைக் காவலராக திருநெல்வேலி மாவட்டத்துக்கு மாற்றலாகி வந்து பணிபுரிந்து வந்தாா். நோய் பாதிப்பு அதிகரிக்கப்பட்டதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காட்லின் செல்வராணி உயிரிழந்தாா்.
இதையடுத்து, கல்லிடைக்குறிச்சி சி.எஸ்.ஐ. சா்ச் கல்லறைத் தோட்டத்தில் 24 குண்டுகள் முழங்க கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் கலா, சிலைத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் வனிதா ஆகியோா் தலைமையில் அரசு மரியாதையுடன் அவரது ுடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
உயிரிழந்த காவலா் காட்லின் செல்வராணிக்கு, கணவா் பியா்சன் ஞானதுரை, ஏஞ்சலின் டேனிசா (13), ஆஸ்லின் ஷானிஸா (8) என்ற இரு மகள்கள் உள்ளனா்.