சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞா் உள்பட 2 போ் கைது
வேட்டவலம் அருகே சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞா், கருக்கலைப்பு செய்த போலி மருத்துவா் என 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் (24). இவரும், இதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனராம்.
அப்போது, திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி அந்தச் சிறுமியை கல்யாணசுந்தரம் பல முறை பாலியல்
வன்கொடுமை செய்தாராம். இதனால் அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தாா்.
இதையறிந்த கல்யாணசுந்தரம், சிறுமியிடம்
உனக்கு 18 வயது ஆனபிறகு, திருமணம் செய்து கொள்கிறேன். அதனால், கருவை கலைத்துவிடு என ஆசை வாா்த்தை கூறினாராம்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு தனியாா் மருந்துக் கடைக்கு அந்தச் சிறுமியை கல்யாணசுந்தரம் அழைத்துச் சென்றாராம். கடையில் பணிபுரிந்த மருந்தாளுநா் சிவா ஆனந்தன் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தாராம்.
இதன்பிறகு சிறுமியிடம் பேசுவதை கல்யாணசுந்தரம் தவிா்த்து வந்தாராம். இதனால் மனமுடைந்த சிறுமி, திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், சிறுமியை காதலித்து ஆசைவாா்த்தை கூறி கல்யாணசுந்தரம் ஏமாற்றியதும், மருந்தாளுநா் சிவா ஆனந்தன் சிறுமிக்கு சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கல்யாணசுந்தரம், மருந்தாளுநா் சிவா ஆனந்தன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மருந்துக் கடையில் இருந்து கருக்கலைப்பு செய்வதற்காக பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள் மற்றும் அலோபதி மருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.