சிவகாசி: 'தரமான கல்வி.. வளர்ச்சி.. முன்னேற்றம்..' - மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த நீதிபதி விஜயபாரதி
தனியார்ப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்தால் அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும், எதிர்காலம் நன்றாக இருக்கும் எனப் பல பெற்றோர்கள் வட்டிக்குக் கடன்களைப் பெற்றாவது குழந்தைகளைத் தனியார்ப் பள்ளியில் படிப்பதற்குச் சேர்த்து வருகின்றனர்.
ஆனால், உண்மை என்னவென்றால் பல அரசுப் பள்ளிகளில் தனியார்ப் பள்ளிகளுக்கு நிகராக மிகச் சிறப்பான கட்டமைப்புகளுடன், பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்போடு குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது.

அரசு உயர் பதவிகளில் இருப்பவர்களே இதற்குச் சாட்சி. இதை உணர்ந்த நீதிபதி ஒருவர் அரசுப் பள்ளியில் தனது குழந்தையைச் சேர்த்து அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் விஜய பாரதி. இவர், புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், இவருக்குப் பணி மாறுதல் வழங்கப்பட்டு விருதுநகர் மாவட்டம், சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இவரது 7 வயது மகள் அன்பிற்கினியாளைக் கல்வி சேர்க்கைக்காக சிவகாசி தாலுகா விஸ்வநத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் 2-ம் வகுப்பு சேர்த்துள்ளார்.

இதைப் பள்ளி தலைமை ஆசிரியர் தனபால், மற்றும் அங்கு பணியாற்றி வரும் மற்ற ஆசிரியர்களும் மாணவ, மாணவியர்களும் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.
இதுபோன்று அரசுப் பள்ளியில் நீதிபதி ஒருவர் தன்னுடைய மகளைச் சேர்த்து இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்து முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.