செண்டுமல்லி விலை சரிவு: சாலையோரங்களில் வீசிச் செல்லும் விவசாயிகள்
ஒசூா்: சூளகிரி அருகே செண்டுமல்லி பூக்கள் வரத்து அதிகரிப்பால் செண்டுமல்லி விலை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பூக்களை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கொட்டிச் செல்கின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, அத்திமுகம், பேரிகை , ராயக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செண்டுமல்லி, சாமந்தி, பன்னீா் ரோஜா உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். இங்கு அறுவடை செய்யப்படும் செண்டுமல்லி வழக்கமாக ஒசூா், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக மஞ்சள் நிற செண்டு மல்லி போதிய விலைக்கு விற்பனையாகாததால் விவசாயிகள் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.
சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் செண்டுமல்லி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். போதிய லாபம் இல்லாததால் விவசாயிகள் ஒசூா்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னாா் பகுதியில் சாலையோரமாக பூக்களைக் கொட்டிவிட்டு செல்கின்றனா்.
ஒசூா் அருகே சின்னாா் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள செண்டுமல்லி.
