சென்செக்ஸ், நிஃப்டி 1% சரிந்து முடிவு!
மும்பை: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பலவீனமான உலகளாவிய போக்குகளும் இணைந்தால் இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 1 சதவிகிதம் சரிந்து நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தகம் சரிந்து தொடங்கிய நிலையில், பிற்பகல் வர்த்தகம் தொடக்கத்திலிருந்து கரடிகள் தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்தியது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 991.98 புள்ளிகள் சரிந்து 81,523.16 ஆக இருந்தது. மத்திய நேர வர்த்தகத்தில் 30 பங்குகளை கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 823.16 புள்ளிகள் சரிந்து 81,691.98 ஆகவும் நிஃப்டி 253.20 புள்ளிகள் சரிந்து 24,888.20 ஆகவும் நிலைபெற்றது.
அந்நிய நிதி வெளியேற்றமும் முதலீட்டாளர்களின் மனநிலையை வெகுவாக பாதித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சென்செக்ஸில் டாடா மோட்டார்ஸ், டைட்டன், எடர்னல், பவர் கிரிட், டாடா ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை சரிந்தும் பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை உயர்ந்தும் முடிந்தன.
நிஃப்டி-யில் டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிரென்ட், டைட்டன் கம்பெனி, கோல் இந்தியா உயர்ந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனைகள், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா ஆகியவை சரிந்து முடிவடைந்தது.
ஆட்டோ, நுகர்வோர் சாதனங்கள், எஃப்எம்சிஜி, உலோகம், ஐ.டி, மின்சாரம், எண்ணெய் & எரிவாயு, ரியல் எஸ்டேட் ஆகிய துறை குறியீடுகள் 1 முதல் 2 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தது.
பங்குச் சந்தை சார்ந்த நடவடிக்கைகளில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர். கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என்று நிதி அமைச்சகம் கூறியதையடுத்து பேடிஎம் பங்குகள் 7% சரிந்து முடிந்தது.
சுமார் 28.6 லட்சம் பங்குகள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் மேப்மை இந்தியா பங்குகள் 9% சரிந்தன. ஜூன் 19ஆம் தேதியன்று நிதி திரட்டுவதை நிறுவனம் பரிசீலிக்க இருப்பதால் கெல்டன் டெக் சொல்யூஷன்ஸ் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்தன.
ஜூன் 16ஆம் தேதியன்று வாரியக் கூட்டத்திற்கு முன்னதாக ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகள் 1.5 சதவிதிதம் வரை உயர்ந்து முடிந்தன. ரூ.2,631.14 கோடி தொலைத்தொடர்பு திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் பி.எஸ்.என்.எல். கையெழுத்திட்டதன் மூலம் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பங்கு விலை 9 சதவிகிதம் அதிகரித்து முடிbடைந்தது.
எரிஸ் லைஃப் சயின்சஸ், அஸ்ட்ராஜெனெகா பார்மா, மணப்புரம் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், அனுபம் ரசாயன், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ், டிவிஸ் லேப்ஸ், தீபக் ஃபெர்டில்சர்ஸ், ப்ராக்டர் அண்ட் கேம்பிள் ஹெல்த், இன்டலெக்ட் டிசைன், லாரஸ் லேப்ஸ் உள்ளிட்ட 100 பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் பதிவு செய்தது.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்த நிலையில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பாவில் பங்குச் சந்தைகளும் இன்று சரிந்து முடிந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) அமெரிக்க சந்தைகளும் சரிந்து முடிவடைந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (புதன்கிழமை) ரூ.446.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.43 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 68.77 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி