ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64% பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!
புதுதில்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நேற்று (ஜூன் 12) ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவிகித பங்குகளை விற்ற நிலையில், அதனை எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ரூ.7,703 கோடிக்கு வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் துணை நிறுவனமான சித்தாந்த் கமர்ஷியல்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் 3.50 கோடி ஈக்விட்டி பங்குகளை ஆதாவது ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவிகித பங்குகளை விற்றது.
பங்குகள் தலா ஒன்றுக்கு சராசரியாக ரூ.2,201 என்று விற்பனையான நிலையில், இதன் மூலம் பரிவர்த்தனை தொகையாக ரூ.7,703.50 கோடியை ஈட்டியது ரிலையன்ஸ்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது பங்குகளை விற்பனை செய்த பிறகு, தனது ஒரு பிரிவான சித்தாந்த் கமர்ஷியல்ஸ் இடம் உள்ள பங்கு 4.90 சதவிகிதத்திலிருந்து 1.26 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
பங்குகளை கையகப்படுத்தியதன் மூலம், ஏசியன் பெயிண்ட்ஸில் உள்ள எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் பங்கு 1.51 சதவிகிதத்திலிருந்து 5.15 சதவிகிதமாக உயர்ந்தது.
என்எஸ்இ-யில் ஏசியன் பெயிண்ட்ஸின் பங்குகள் நேற்று 0.73 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,225 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: 25 கோடி கிலோவாக உயா்ந்த தேயிலை ஏற்றுமதி